காத்திருந்தால் வருவேன்

இந்த டிசம்பர் கச்சேரி, பரதநாட்டிய அரங்கேற்றம், இசை விழா, நாடகம் இந்தமாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் போய்வந்தது பற்றி சுஜாதா மாதிரி ஆட்கள் சிலாகிப்பதை வாசிப்பதுண்டு. குமுத விகடனில் படங்கள் போடுவார்கள். உச்சஸ்தாதியில் தெரிந்த முகங்களாய் இருக்கும் சிரோன்மணிகள் ஆ! என்றபடி போஸ் கொடுத்திருப்பார்கள். இவ்வளவைத் தாண்டி இசைக்கும் நடனக்கலைக்கும் நமக்கு நாலு லாந்தர் விளக்கு தூரம்.

நண்பர் ஒருவர்  “மயிலாப்பூர் பாரதி வித்யாபவனில் யூ.எஸ்ஸிலிருந்து வந்த பொண்ணு ஒருத்தி பரதமும், ஒடிசியும் இங்கே கத்துட்டு ஆடுறா!  என் மகள் க்ளாஸுக்குப் போற குருதான் இவளுக்கும் குரு. நீங்களும்  கட்டாயம் பார்க்க வாங்க”. என்று அழைத்தார். அந்த அழைப்பே வித்யாசமாக இருந்ததால் ஒருவித கூச்சத்தோடு திரையரங்கம் போல இருந்த மயிலாப்பூர் கோயில் தேருக்குப் பக்கத்தில் இருக்கும் பவனுக்குள் நுழைந்தேன்.

எனக்கு இந்தப் பெயரை தமிழில் எழுதவரவில்லை. மட்டுமல்லாமல் தப்பாயிடக்கூடாதே. முன்விளம்பரத்தில் இருந்தபடி, smt. Kaustavi sarkar குருவாகக் கற்றுக் கொடுத்து,  “ஸ்ரேயா மோகன்செல்வன்” என்ற அமெரிக்க இந்தியப் பெண் நடனமாடுகிறார் என்று புரிந்துகொண்டேன்.

பூரண இருட்டில் ராகமாக “காத்திருந்தால் வருவேன் மஹா கணபதி” என்றொருவர் பாட, அபிநயங்கள் பிடித்து, சுழன்று, கண்கள்  சுழற்றி, கால்கள் வீசி, பின்பக்கம் வளைந்து, ஆனைபோல துதிக்கை உயர்த்தி, அடவுகள் பிடித்து அழகழகாய் ஆடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். வசீகரமாக இருந்தது. கொஞ்சமும் கண் அகலவில்லை.

பரத நாட்டியத்தை இப்படி மூச்சுச் சத்தம் கூட விடாதவர்கள் சூழ்ந்திருக்கும் அரங்கில், அதுவும் மயிலாப்பூரிலே பார்ப்பது இதுதான்  முதல்முறை.
 நான் பாட்டுக்கு ஒடிசி பற்றி எனக்கு டிப்ஸ் ஏதும் கொடுக்க முடியுமா என கேட்டுவிடுவேனோ என்று பயந்து சீக்கிரத்திலே வெளியேறிவிட்டேன்.

சின்ன வயதில் அக்காளின் தாவணியை தோள்களின் குறுக்கே இட்டுக்கொண்டு பரதம் ஆடியது (அல்லது அதனை பரதம் என நம்பிக்கொண்டு) நினைவுக்கு வந்தது. நல்லவேளை பெரிய விபரீதம் ஏதும் நடக்கும் முன்னே அக்காள் வந்து என் தாவணியைக் குடுறா தடிமாடு என்று துரியோதனன் போல என்னிடமிருந்து உருவிக்கொண்டது.

இன்னுமொரு ஆண் திரவுபதி ஆக்கப்பட்டிருந்த நினைவு உங்களுக்கெல்லாம் நினைத்திப் பார்க்கவே சங்கடமாக இருக்கும்.

-கார்த்திக். புகழேந்தி.
12-08.2015. 

Comments

  1. சுவையாக பகிர்ந்தது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. நல்ல அனுபவம் உங்களுக்கு! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல அனுபவம்....ஹஹஹ் சே நீங்க ஆட வந்திருக்கலாமோ...ஹஹஹ்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது