ஆலயம் செல்வது சாலவும் நன்று

கடந்த (29-05-2015) வெள்ளிக்கிழமையன்று மதியம் கல்வெட்டாய்வாளர் திருமதி. பத்மாவதி ஆனையப்பன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு. திருப்போரூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள நவ வீரர்கள் சிலைகளைக் காணப் போகிறோம். பிற்பகல் மூன்று மணிக்கு நீங்களும் வந்துடுங்க கார்த்திக் என்று...

அவசரவேலை என்று எதுவும் இல்லை என்பதாலும், கூகுளில் சென்னைக்கும் திருப்போரூருக்கும் 28சுமார் கிலோமீட்டர்களே காண்பித்ததால்  எப்படியும் மாலையில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையாலும் நானும் ஐக்கியமாகிக் கொண்டேன். வழியில் நண்பர் திரு.பன்னீர் சிப்காட் அருகில் இணைந்துகொள்ள திட்டப்படி திருப்போரூர் கோயிலை மாலை நான்கு மணிக்கு அடைந்தோம்.

கோவில் நுழைவாயிலில் இருந்து நேரே பிரகாரத்தின் பின்புறம் சென்று, கற்பலகையில்  செதுக்கப்பட்டிருந்த  நவவீரர்கள் என்றழைக்கப்படும் வாளும் கேடயமும் ஏந்தி அணிவகுத்து நின்ற வீரர்களின் சிலைகளைக் காண்பித்தார் பன்னீர். 

அதேவரிசையில் விநாயகர் சிலைக்கு அருகில் அமைந்திருந்த (சீனர்கள் சாயலில் மீசை வைத்திருந்த)   முனிவரை கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார் பேராசிரியர். கோவிலின் தன்மையையும் தூண்களின் வடிவமைப்பையும் வைத்து கோயில் அமைக்கப்பட்ட காலம், சைவத்திற்கு முன்பு யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருக்கலாம் என்றெல்லாம் பன்னீரும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரகாரம் சுற்றி அப்படியே முன்மண்டபத்திற்கு வந்தால், பின்பக்கம்  நவ வீரர்கள் எப்படி வாளும் கேடயமும் ஏந்தி நிற்கிறார்களோ அதேபோலவே 24 வெள்ளை கிரானைட் தூண்களிலும் திசைக்கு ஒருவராக நான்குபுறமும் செதுக்கப்பட்ட வீரர்களின் உருவச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார் பேராசிரியர்.

சில தூண்களில் அதே மீசைக்கார முனிவரும் தென்பட்டனர். பொதுதரிசனம் செல்லும் கம்பி வளைவுகளுக் கிடையில் அமைந்த  ஒரு தூணில் மயில்மீது அமர்ந்த முருகனும் அதே முனிவரும் நிற்கும் சிலை காணப்பட்டது.

 “முக்கியமான போர் ஒன்று இப்பகுதியில் நிகழ்ந்திருக்க வேண்டும். அதன் காரணகாரியங்களோடு இந்த கோவில் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதோடு மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களையும் ஆய்வு செய்தால் மேற்கொண்டு இன்னும் தகவல்கள் கிடைக்கும்” என்றார் பேராசிரியர்.

சுற்றுப்பிரகார மண்டபம் ஒன்றில் தென்பட்ட தமிழ்கல்வெட்டு ஒன்றில்  “பாண்டிய” என்ற சொல்லைச் சுட்டிக்காட்டினார் பேராசிரியர். இப்போதெல்லாம் எங்கேயாவது யாராவது பாண்டிய மன்னர்கள் பெயரைச் சொன்னாலே உங்களுடைய நினைவுதான் வருகிறது என்று நகைத்து வைத்தேன்.

கூடவே நின்றிருந்த பன்னீர் இடையில் சிறிது நேரம் காணாமல் போய், யாரோ ஒரு பாட்டியிடம் போய் கோயில் பற்றிய பல தகவல்களைக் கேட்டு விசாரித்துக் கொண்டு வந்தார். சிற்பங்களைப் பார்த்ததுமே இது இது இன்னாருடைய சிலை இதே போன்று தஞ்சாவூரில் ஒரு சிற்பம் இருக்கிறது என்று விரல்நுனியில் தகவல் அடிக்கிறார் மனிதர்.  

'பன்னீர் மாதிரியான ஈடுபாடுள்ளவர்களை இந்த பண்பாட்டு அடையாளச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்தவேண்டும்' என்று தன்னுடைய அக்கரையை பேராசிரியர் வெளிப்படுத்தினார்.

வெளிமண்டபத்தின் தூண்களில், வீணையேந்திய தட்சிணாமூர்த்தி யானையை பிளந்த சிவன், வில்லேந்திய முருகன்,  கோச்சடையான், நடராஜர், என கல்லிலே கண்ட கலைவண்ணங்களை காமிராவில் சுட்டுக் கொண்டு மாலை ஆறுமணிக்கு சென்னைக்குத் திரும்பினோம்.

வழிபாட்டுக்காக மட்டுமே கோயிலுக்குச் சென்று பக்தியில் ஆழ்ந்துபோகும் குடும்பத்தில் பிறந்தாலும், தூண்களையும், சிற்பங்களையும், சிலைகளையும், புரியாத கல்வெட்டு எழுத்துகளையும் உற்றுநோக்கிக் கொண்டிருப்பவனாக வளர்ந்த எனக்கு இதுபோல அனுபவங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான வையாகவே அமைகின்றன. அதிகமாக குறிப்புகள் எழுதிக்கொள்ளாவிட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  தகவல்களையு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். இதுவேதான் திருப்போரூரிலும் நடந்தது.

‘மாடர்ன் எழுத்தாளனா மட்டும் இல்லாமல் வரலாற்றையும் தெரிஞ்சுக்கோங்க கார்த்திக்’ என்று பேராசிரியர் சொல்லும்போது, இன்னும் கொஞ்சம் ஆர்வம் வரத்தான் செய்கிறது. 

சமீப நாட்களாக ஒரு கோயிலை எப்படி வரலாற்று ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கும் கலைக்கூடமாக அணுகவேண்டும் என்ற பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக் கொண்டு வருகிறேன். 

கோயில்கள் நம்முடைய கலை, வரலாறு, பண்பாட்டின் ஒருங்கமைந்த கூடங்கள். நம்முடைய கலையையும், வரலாற்றையும் தெரியாத இனமாக வாழ்ந்து என்னத்தைக் கிழிக்கப்போகிறோம். 

 ‘எதிரிகளைத் தடுத்து ஆடும் மன்னர்களில் அடித்து ஆடிய மன்னன் இராஜேந்திர சோழன் தான்’ என்று சொல்லக் கேட்கும்போது சிலிர்க்கிறதுதானே. 

ஆக நம் மண்ணின் மன்னனின் வரலாறு அறிவதும், போற்றுவதும் காப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையென்றே எண்ணுகிறேன். 

சும்மாவா சொல்லி வைத்தாரன்று தமிழ்க்கிழவி,  “ஆலயம் செல்வது சாலவும் நன்றென்று”.

-கார்த்திக். புகழேந்தி.
09-06-2015.


புகைப்படங்கள் கீழே...  

திருப்போரூர் - மாமல்லபுரம் சாலை.

கல்பலகையில் ஆயுதமேந்திய நவவீரர்கள்
































Comments

  1. WORLD TAMILS ESTABLISHED MANY HINDU TEMPLES IN EU,AU,NA,NZ ETC! THOSE ARE SPRITUAL & CULTURAL MEETING PLACES TO ALL! MATRIALISM AS WELL AS SPRITUALISM ARE ESSENTIAL FOR HARMONY IN THIS WORLD! WE CAN CHANGE THE INDIAN/SL/ML/SG TEMPLES TOO WITH MANY ASPECTS!

    ReplyDelete
  2. இந்த விசயத்துல எனக்கு நான் தமிழச்சின்னு சொல்லிக்குறதுல நிறைய பெருமை உண்டு, ஆனா கத்துக்க ஆர்வம் காட்டினது இல்ல. இனி கண்டிப்பா எல்லாம் தெரிஞ்சுக்கணும். எங்க ஊர் சுசீந்திரம் பக்கம் வந்து கொஞ்சம் அத பத்தியும் எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. காயத்ரி நீங்க சுசீந்திரமா? நாகர்கோவில்? அட அப்ப கையக் கொடுங்கப்பா...ப்ளீஸ் நானும் நாகர்கோவில்....திருப்பதிசாரம் கேட்டிருக்கீங்களா? அந்த ஊர் தான்...இப்போ சென்னைல.....நீங்கள் படித்ததெல்லாம் நாகர்கோவிலா? ப்ளீஸ் தகவல் ப்ளீஸ்...

      கீதா

      Delete
  3. அட கார்த்திக் நல்ல தகவல்கள். ரொம்ப நாளா திருப்போரூர் போக வேண்டும் என்று எண்ணம் உண்டு. இப்போ கண்டிபா போயே ஆகணும்னு தோன்றிவிட்டது...படங்கள் ரொம்ப அழகா இருக்குப்பா..

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது